Saturday, May 29, 2010

அவள் யார் ????

அழகிற்கோர் இலக்கணம் அவள்
பொறுமையின் சிகரம் அவள்
கவி பாடும் புலவர்-அவளைப்
புகழ் மேடையில் ஏற்றிடுவர்.
நாம் வியக்கும் அணு ஆயுதம்
அவள் முன்னே சிறு ஆயுதம்.
கடையெழு வள்ளல்கள்- அவள்
கொடை முன்னே தோற்றிடுவர்.
அவளுக்கொரு துணையில்லை
உறவினரும் அருகில் இல்லை.
அவள் வளர்த்த பிள்ளைகள்
பலகோடி பேர் உண்டு.
இருந்தும் என்ன பயன்
அவள் சோகம் யாரறிவார்?
கேட்கவும் யாருமில்லை!!!
கேட்டாலும் யாரும் இல்லை!!!!...

அவள் யார் ?????????

Wednesday, May 19, 2010

தமிழ் பண்பாடு

மேற்கின் நடை கண்டு
நம்மவர் பண் மறந்து
அரைகுறை ஆடையில்
தரணியை வலம் வரும்
நாகரிகப் பெண்டிரே
கேளும் ஒரு சேதி...

புருவம் வில்லாக
பார்வை கணையாக
கொவ்வை இதழாக
சங்கு கழுத்தாக
உடுக்கை இடையாக இருந்தாலும்

கற்பு குடையாக
பண்பாடு மறக்காத
தன்மானம் உடையாக
கொண்ட நல் பாவையர்
கண்டும் நம் காளையர்
மனத்தாலும் தீங்கிழையார்
மறந்தும் அவள் நிழல் தொடார்..

அறிவிரோ நீவிர் - தமிழ்
பண்பாட்டின் சிறப்புதனை

Sunday, May 09, 2010

வானம்

நீலம் உன் வண்ணம்
நெடுநீளம் உன் தேகம்
வெண்மை உன் சிரிப்பு
கருமை உன் அழுகை
கண்ணெதிரில் நீயுண்டு
தொட்டுணர யாருமில்லை

மெய்ஞானம் உனை வாழ்த்தும்
விஞ்ஞானம் உனை வாட்டும்-உன்
மேனியில் பட்ட காயம்
அறிஞர் சிலர் செய்த மாயம்

உன் நலமே எம் நலம்
அதை உணரும் காலம் வரும்
அயலவனை எதிரியென
எண்ணிய மனிதனவன்
தனைக் காக்க எண்ணி
தனக்கே எதிரியானன்
என்றுணர்வான் இம்மூடன் -அன்று
பிழைக்கும் மனிதகுலம்........